Thursday, February 28, 2008

மாதங்களில் அவள் மார்கழி! - 12

பகுதி - 11

"நந்தினி! சொன்னாக் கேளும்மா! சக்தியை அடிக்க நான் ஆள் அனுப்பலை"

"நீங்க எதுவும் சொல்லவேணாம்! எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டித்தான் இருந்தேன்! நீங்க அனுப்பலைன்னா நீங்களே போயி ஏன் அவங்களை ஜாமீன்ல வெளியே எடுக்கணும்?-"

"ஐயோ! நான் அனுப்பாம அவனுங்களா போயி அடிச்சிட்டு என் பேரைச் சொல்லி போயி சரண்டர் ஆகியிருக்கானுங்க! கட்சில என் பேரு இப்ப கெட்டுப் போயிடக் கூடாதுன்னுதான் நான் போயி வெளியெ எடுத்தேன்! அவனுகளை அப்புறமா விசாரிச்சிக்கலாம், இப்போதைக்கு முதல்ல வெளியே எடுத்துடுங்கன்னு சொல்லிதான் இன்ஸ்பெக்டர் என்னை கூப்பிட்டாரு"

"போதும்ண்ணே! எல்லாம் போதும்! எப்ப என் மனசுக்குப் பிடிச்சவன்னு தெரிஞ்சும் அவனை அடிக்க நினைச்சியோ அப்பவே உன் தங்கச்சி செத்துட்டாண்ணே!"

"நந்தினி! அப்படியெல்லாம் பேசாதடா! என்னால தாங்க முடியாது! உனக்கு ஒண்ணுன்னா நான் துடிச்சிப் போவேன்னு தெரியாதாடா உனக்கு!"

"ம்ம் தெரிஞ்சி போச்சே இப்பதான் எல்லாம்! சக்தியை நான் விரும்பினா உன் அந்தஸ்து கௌரவத்துக்கு எல்லாம் குறைச்சல் வந்துடும்னு எனக்கே தெரியாம அவனை முடிக்க முடிவு பண்ணிட்டியேன்னா"


"நந்தினி! என்னம்மா இது! உங்க அண்ணன் இவ்ளோ தூரம் சொல்றாருன்னா உனக்கு நம்பிக்கை இல்லையா! உங்க அண்ணன் உன் மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்காரு! கொஞ்சம் யோசிச்சுப் பாரும்மா!"

"நீங்க பேசாம இருங்க அண்ணி! எங்க அண்ணன் எப்பேர்ப்பட்டவரு! எப்பெப்ப எப்படியெல்லாம் வேஷம் போடுவாருன்னு இப்ப தெரிஞ்சி போச்சு! தங்கச்சி தங்கச்சின்னு பாசம் காட்டினதெல்லாம் வெறும் வேஷம் அண்ணி! இதயம் ஒண்ணு அவருகிட்டே இருந்தாத்தானே! இன்னும் அவரைப் பத்தி என்ன யோசிக்கணும் அண்ணி?"

"நந்தினி! கொஞ்சம் என்ன பேசுறேன்னு யோசிச்சிப் பேசு! உங்க அண்ணனைப் பத்தி உனக்கு இன்னும் முழுசாத் தெரியாது"

"மஞ்சுளா! கொஞ்சம் பேசாம இரு! நான் பேசிக்கிறேன்" என்று சமாதானப் படுத்த முயன்றான் தென்னரசு!


"தெரிய வேண்டாம் அண்ணி! தெரியவே வேண்டாம்! இது வரை தெரிஞ்சதே போதும்! இந்த மிருக குணம் உள்ளவரை என் அண்ணன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு"

"என்னம்மா நானும் பார்த்துகிட்டே இருக்கேன்! ஓவரா பேசுறியேம்மா! உங்க அண்ணனைப் பத்தி இவ்ளோ பேசுறியே! முதல்ல உன்னைப் பத்தி தெரியுமா உனக்கு?"

கோபத்தில் வெடித்தாள் மஞ்சுளா. அடுத்த கணம் பளாரென்று கன்னத்தில் இறங்கியது அறை!

"சொல்லிகிட்டே இருக்கேன்! பேசாம போடி உள்ளே"
கணீரென்ற குரலில் வந்த தென்னரசுவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாயைப் பொத்தி அழுதவாறே தந்து படுக்கையறைக்குள் நுழைந்தாள் மஞ்சுளா!

"பார்த்தீங்களா! பேசிகிட்டிருக்கும்போது பொண்டாட்டியையே இப்படி அடிக்குறீங்களே! மனுஷ ஜென்மமா நீங்க? இனிமே நான் இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்! உங்க சொத்து, அந்தஸ்து, கௌரவம் எல்லாத்தோடவுமே நீங்க சந்தோஷமா இருங்க"

அழுகையுடனும் ஆத்திரத்துடனும் வேகமாக வெளியேறினாள் நந்தினி!

............தொடரும்.